ட்ரம்பின் அரங்குக்கான கூட்டாட்சி நிதி ஒதுக்கீட்டில் சிக்கல்: அமெரிக்க செனட் சபை விடுத்த உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அமைக்கத் திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட நடன அரங்குக்கான பாதுகாப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு, பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதற்கு செனட் சபை அதிகாரி ஒருவர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட நிதி ஒதுக்கீடு, அவையின் வரவு - செலவு விதிகளுக்கு முரணாக இருப்பதாக செனட் சபையின் நாடாளுமன்ற அதிகாரி எலிசபெத் மெக்டொனக் சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.
இந்த அரங்கை அமைப்பதற்கான 400 மில்லியன் டொலர் செலவு, தனியார் நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.
பாதுகாப்பு மேம்பாடு
ஆனால், இந்த அரங்கு மற்றும் அதன் கீழ் அமையவுள்ள நிலத்தடி வசதிகளுக்கான பாதுகாப்பு மேம்பாடுகளைச் செய்ய, ரகசிய சேவைப் பிரிவுக்கு வரவு - செலவு மூலம் 1 பில்லியன் டொலர் பொது நிதியை ஒதுக்க குடியரசுக் கட்சியினர் முயன்றனர்.

இதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க மக்கள் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதாரச் சுமைகளை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழலில், இதுபோன்ற ஆடம்பரத் திட்டங்களுக்கு மக்கள் பணத்தை வீணடிப்பது தேவையற்றது என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இருப்பினும், கடந்த ஏப்ரல் 25 அன்று வொஷிங்டனில் ட்ரம்ப் பங்கேற்ற ஒரு ஊடக நிகழ்வின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சி சம்பவத்தைக் குறிப்பிட்டு, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு இந்த நிதி இன்றியமையாதது என்று குடியரசுக் கட்சியினர் வாதிடுகின்றனர்.
தற்போதைய செனட் சபையில் குடியரசுக் கட்சியினருக்கு 53-47 என்ற பெரும்பான்மை மட்டுமே உள்ள நிலையில், இந்த நிதியை நிறைவேற்ற எதிர்க்கட்சியினரின் ஆதரவு தேவைப்படும் என்பதால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தற்போது பெரும் இழுபறி நீடிக்கிறது.