அடுத்தது கியூபா தான்..! ட்ரம்ப்பின் பதிவால் கிளம்பிய சர்ச்சை
கியூபா யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல என்றும், தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா ஏதேனும் இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது ஒரு "இரத்தக் களரியில்" போய் முடியும் என ஜனாதிபதி மிகேல் தியாஸ் கானெல் எச்சரித்துள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு கியூபாவில் இருந்து வெளியேறியவர்களின் சிறிய ரக விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான 94 வயது ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான அழுத்தங்களை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பல்தரப்பட்ட சிக்கல்களில் கியூபா
இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கியூப மக்களுக்கு வெளியிட்டுள்ள காணொளி செய்தியில், அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு கியூபாவின் தற்போதைய ஆட்சியாளர்களே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கியூபாவுடன் ஒரு புதிய சுமுகமான உறவை உருவாக்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அதற்காக 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க முன்வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம், அந்த நாட்டிற்கு எரிபொருள் வழங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து மறைமுகமாக ஒரு பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது.
1996ஆம் ஆண்டில், மியாமியைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட 'Brothers to the Rescue' என்ற கியூபா அகதிகள் நல அமைப்பைச் சேர்ந்த இரண்டு சிறிய ரக விமானங்கள், கியூபா போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதிலிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்க்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இந்த தாக்குதல் சர்வதேச கடல் பகுதியில் நடந்ததாக சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICAO) பின்னர் உறுதிப்படுத்தியது. எனினும், அந்த விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால், முன்கூட்டியே பிறப்பிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தரவுகளின் படியே இராணுவம் செயல்பட்டதாக கியூபா அரசு வாதிட்டது.
அப்போது ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை, கடந்த ஜனவரி 3 அன்று அமெரிக்க இராணுவம் காரகாஸ் நகரில் அதிரடித் தாக்குதல் நடத்தி சிறைபிடித்துள்ளது.

அதே போன்று, குற்றவியல் வழக்கை தற்போது ரவுல் காஸ்ட்ரோ மீதும் அமெரிக்கா தொடுக்கவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்த போது, வெனிசுலாவைத் தொடர்ந்து "அடுத்தது கியூபா தான்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள கியூபாவின் தற்போதைய ஜனாதிபதி மிகேல் தியாஸ் கானெல், கியூபா யாருக்கும் அச்சுறுத்தல் அல்ல என்றும், தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா ஏதேனும் இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது ஒரு "இரத்தக் களரியில்" போய் முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.