ஈரான் கால்பந்து அணிக்கு உதவிய அமெரிக்கா - ட்ரம்ப் அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக ஈரான் நாட்டு கால்பந்து அணிக்கு அமெரிக்கா விசா வழங்கியிருப்பது "மிகவும் ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயம்" என்று வெள்ளை மாளிகையின் உலகக் கோப்பை பணிக்குழுத் தலைவர் அண்ட்ரூ கியூலியானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் அணியை அமெரிக்கா நடத்தும் விதம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஆண்ட்ரூ கியூலியானி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.
ஈரான் வீரர்களுக்கு அமெரிக்கா செய்த உதவி
தற்போதுள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் ஈரான் கால்பந்து அணி அமெரிக்காவில் தங்கிப் பயிற்சி பெற அனுமதிக்கப்படவில்லை.

மாறாக, அவர்கள் அண்டை நாடான மெக்சிகோவில் தங்கள் பயிற்சி முகாமை அமைத்துத் தங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஈரான் அணி வீரர்கள் போட்டிகளில் விளையாடுவதற்காக மட்டும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு விமானம் மூலம் வந்துவிட்டு, போட்டி முடிந்ததும் உடனடியாக மீண்டும் மெக்சிகோவிற்கே திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தொடர் அலைக்கழிப்பு மற்றும் அமெரிக்காவின் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலையில் ஈரான் அணிக்கு விசா வழங்கப்பட்டதே ஒரு பெரிய விஷயம் என்ற தொனியில் ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.