விமான விபத்துகளைத் தடுக்க புதிய சட்டம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமூலம் தோல்வி
கடந்த ஆண்டு வொஷிங்டன் அருகே நடந்த பயங்கரமான வான்வழி மோதல் போன்ற விபத்துகளைத் தவிர்க்க, விமானங்களில் நவீன கண்காணிப்பு கருவிகளைப் பொருத்துவதைக் கட்டாயமாக்கும் சட்டமூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) தோல்வியடைந்தது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும், இராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகொப்டரும் மோதிக்கொண்ட விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.
புதிய சட்டம்
இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானங்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகத் தெரிவிக்கும் ADS-B In என்ற தொழில்நுட்பத்தைக் கட்டாயமாக்க 'ROTOR Act' என்ற சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

தற்போதுள்ள தொழில்நுட்பம் அருகில் விமானம் இருப்பதை மட்டுமே எச்சரிக்கும். ஆனால் இந்த புதிய கருவி, மற்ற விமானங்கள் எங்கே, எவ்வளவு வேகத்தில் வருகின்றன என்பதைத் துல்லியமாகத் திரையில் காட்டும். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) 2008-ஆம் ஆண்டிலிருந்தே இந்த வசதியைக் கட்டாயமாக்கப் பரிந்துரைத்து வருகிறது.
இந்த சட்டமூலத்துக்கு 264 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 133 பேர் எதிராகவும் வாக்களித்தனர். விசேட நடைமுறையின் கீழ் சட்டமூலம் நிறைவேற மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவைப்பட்ட நிலையில், போதிய வாக்குகள் கிடைக்காததால் இது தோல்வியடைந்தது.
சட்டமூலம் தோல்வி
விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, இராணுவம் மற்றும் சிறு விமான உரிமையாளர்கள் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்குப் பதிலாக, இன்னும் விரிவான ஆய்வுகளுடன் கூடிய மாற்று சட்டமூலத்தை அவர்கள் ஆதரிக்கின்றனர்.

ஒவ்வொரு விமானத்திலும் இக்கருவியைப் பொருத்த ஆகும் செலவு மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த வாக்கெடுப்பைக் காண நேரில் வந்திருந்தனர்.
சட்டமூலம் தோல்வியடைந்தது தங்களுக்குப் பெரும் ஏமாற்றமளிப்பதாகவும், லாபத்தை விட உயிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam