ட்ரம்பின் முரண்பட்ட முடிவுகளால் நேட்டோ உறுப்பு நாடுகளிடையே எழுந்துள்ள குழப்பம்
ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவ வீரர்களை நிலைநிறுத்துவதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்து வரும் முரண்பட்ட முடிவுகளால் நேட்டோ உறுப்பு நாடுகளிடையே எழுந்துள்ள குழப்பத்தைத் தணிக்க அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ முயன்றுள்ளார்.
சுவீடனில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பேசிய அவர், உலகளாவிய பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படுவதாகவும், இது கூட்டணி நாடுகளுடன் கலந்தாலோசித்தே செய்யப்படுகிறது என்றும் விளக்கமளித்தார்.
அதிரடி மாற்றங்கள்
சமீபத்தில் ஜெர்மனியுடனான அரசியல் மோதலால் அங்கிருந்து 5,000 அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெற உத்தரவிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், அதே நேரத்தில் தனது ஆதரவாளர் அதிபராக இருக்கும் போலாந்து நாட்டிற்கு கூடுதலாக 5,000 வீரர்களை அனுப்புவதாக அறிவித்தார்.

ட்ரம்பின் இந்த அதிரடி மாற்றங்கள் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் அமெரிக்காவிற்கு உதவ மறுத்ததே ட்ரம்பின் இந்த அதிருப்திக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ட்ரம்ப் தனது 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையின்படி ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகளைக் குறைக்க திட்டமிட்டு வருவதால், ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்கு இனி அமெரிக்காவைச் சார்ந்திருப்பது குறையும் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.