அமெரிக்காவில் விமானத்திற்குள் நடந்த மோதல்.. இந்திய வம்சாவளி நபர் கைது!
அமெரிக்க விமானம் ஒன்றில் சக பயணியைத் தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் குறித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கும் பிற பயணி ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 30 அன்று பிலடெல்பியாவிலிருந்து மியாமி நோக்கிச் சென்ற ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விசித்திரமான நடத்தை
இதில், 21 வயதான இந்திய வம்சாவளியான இஷான் சர்மா என்பவருக்கும், அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த கீனு எவன்ஸ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து சண்டையிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
எவன்ஸின் கூற்றுப்படி, சர்மாவின் நடத்தை விசித்திரமாக இருந்ததாகவும், அது தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
உதவி பொத்தான்
சர்மா தொடர்ந்து தொந்தரவு செய்ததால் உதவி பொத்தானை அழுத்தியதாகவும், அதன் பிறகு சர்மா தன்னைத் தாக்கி கழுத்தை நெரித்ததாகவும் எவன்ஸ் என்ற நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். தற்காப்பிற்காகவே தான் சண்டையிட வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், விமானம் மியாமியில் தரையிறங்கியதும், இஷான் சர்மாவை கைது செய்துள்ளதுடன் அவர் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்ற விசாரணையின் போது, சர்மாவின் வழக்கறிஞர் வேறு ஒரு கோணத்தை முன்வைத்துள்ளார்.
அதன்படி, சர்மா தனது மத நம்பிக்கைகளின்படி தியானம் செய்ததை எவன்ஸ் விரும்பவில்லை என்றும், அதுவே சண்டைக்குக் காரணம் என்றும் அவர் வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |