யூரியா முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அக்கராயன் குள கமநல சேவை குழுவின் தலைவர் குற்றச்சாட்டு
கிளிநொச்சி - அக்கராயன் கமநல சேவை நிலையத்தில் கையிருப்பிலிருந்த 1500 கிலோகிராம் யூரியா மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஊடாகவே முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அக்கராயன் குளம் கமநல சேவைக் குழுவின் தலைவர் ம.புவனேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சூம் தொழிநுட்பம் மூலமும் நேரடியாகவும் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதி, அக்கராயன் கமநல சேவை நிலையத்திலிருந்து உரம் கொண்டு செல்லப்பட்ட விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம், உங்களுக்குத் தேவையான உரத்தை நாங்கள் தருகிறோம் என மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கூறியதாக அக்கராயன் குளம் கமநல சேவைக் குழுவின் தலைவர் பகிரங்கமாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக மாவட்ட உதவி ஆணையாளர் அவர்களைத் தொடர்பு கொள்ளப் பல தடவை முற்பட்ட போதும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முறைகேடாக பயன்படுத்தப்பட்ட யுரியா
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கமநல சேவை நிலையங்களில் இரசாயன உர விநியோகம் நிறுத்தப்பட்டதன் பின்னர் கையிருப்பிலிருந்த சுமார் 63 மெட்ரிக் தொன் இரசாயன உரம் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரின் துணையுடனே இவ்வாறு மாயமாகி இருப்பதாக பல்வேறு தரப்புகளும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இரசாயன உர பயன்பாட்டை நிறுத்தி சேதன உரத்தைப் பயன்படுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இரசாயன உர விநியோகம் கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் நிலையங்களுடாக நிறுத்தப்பட்டன.
இதன் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் சுமார் 63 மெற்றிக் தொன் இரசாயன உரம் கையிருப்பில் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதாவது 16.25 மெட்ரிக் டன் யூரியா, 23.45மெற்றிக்தொன் ரீ எஸ் பி, 23.21 மெற்றிக் தொன் எம்.ஓ.பி ஆகியன முழங்காவில், அக்கராயன், இராமநாதபுரம், கிளிநொச்சி, புளியம்பொக்கனை ஆகிய கமநல சேவை நிலையங்களில் கையிருப்பிலிருந்தன.
இவ்வாறு கையிருப்பிலிருந்த இரசாயன உரம்
இப்பொழுது மாயமாகி உள்ளன. அக்கராயன் கமநல சேவை நிலையத்திலிருந்த
யூரியா உரத்தைக் கொண்டு சென்றமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்தினம்
முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



