பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம்! - உபுல் ரோஹன
கோவிட் நோய்த் தொற்றாளர்கள் தொடர்பிலான உண்மையான நிலைமை வெளிப்படுத்தப்படவில்லை என பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கோவிட் நோய்த் தொற்றாளிகளை அடையாளம் காணும் நோக்கில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை வெளியிடப்படுவதில் கால தாமதம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை முடிவுகள் காலம் தாழ்த்தப்படுவதனால் நோய்த் தொற்றாளர்கள் குறித்த புள்ளி விபரத் தகவல்கள் அண்மைய தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது இன்றைய கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை என வெளியிடப்படும் விபரங்கள், மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலானது என அவர் தெரிவித்துள்ளார்.
பீ.சி.ஆர் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாரிடமிருந்து பரவியது என்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியாத கோவிட் தொற்றாளிகள் சமூகத்தில் பதிவாகி வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.