புதுக்குடியிருப்பில் சுகாதாரமற்ற வர்த்தக நிலையங்கள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதிகளில் சுகாதாரமற்ற வகையில் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் உள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் முறைப்பாட்டினையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களினால் இரணைப்பாலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர், குறித்த வர்த்தக நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, காலாவதியான வண்டுமொய்த்த உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.
கடுமையான எச்சரிக்கை
அதனையடுத்து, குறித்த வர்த்தக உரிமையாளர்கள் நேற்றையதினம்(30.05.2025) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது, விசாரணை செய்த நீதிபதி 7,500 ரூபா தண்டப்பணம் விதித்ததுடன் வர்த்தகர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கியிருந்தார்.
அத்துடன், இரணைப்பாலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், சொப்பின் பைகள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்கள் வீதியோரங்களில், வாய்க்கால்களில் வீசிய வர்த்தகர்களுக்கு எதிராகவும் நேற்றையதினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சோதனை நடவடிக்கை
இதனை விசாரணை செய்த நீதிபதி, குறித்த வர்த்தகருக்கு எதிராக 25,000 ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கியிருந்தார்.
அத்துடன், புதுக்குடியிருப்பு நகர பகுதிகளிலும் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியான முறையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் இவ்வாறான சுகாதாரமற்ற உணவு பொருட்கள், மனித நுகர்விற்கு ஒவ்வாத உணவு பொருட்கள், வர்த்தக நிலையங்கள் சுகாதாரமற்று இருத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அவ்வாறு சுகாதாரமற்று இருப்பின் அந்த உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
