மாணவர்களின் பதாதைகளை பறித்த பொலிஸார்! போராட்டத்தில் அமைதியின்மை
கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் ஸ்ரீலங்கா காவல்துறையினருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினால் சில மணி நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக இன்று பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை நோக்கி முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் மாணவர்களுக்கும் ஸ்ரீலங்கா காவல்துறையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
அத்துடன் மாணவர்களின் பதாதைகளை காவல்துறையினர் பறித்துள்ளதுடன் போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டமையினால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத் தடை இன்று நீக்கப்பட்ட நிலையில் புதிய சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.