நீதிக்கான அணையா விளக்கு போராட்டமும் அதன் பின்னால் இருந்த குழப்பவாதிகளும்
இலங்கை தீவு முழுவதும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழ் 133 ஆண்டுகள் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த நாட்டில் இன ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டது.
தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் அதனை சரியான முறையில் அணுகி தீர்க்க முற்படாததன் விளைவு தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்தி போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.
முப்பது வருட இவ் யுத்தம் காரணமாக முழு நாடும் பொருளாதார பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ளதுடன் உயிரிழப்புக்கள், சொத்தழிவுகள் என்பன ஏற்பட்டதுடன் காணாமல் போதல்களும் இடம்பெற்றன.
தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம்
இலங்கை நாட்டைப் பொறுத்தவரை யுத்த காலத்தின் போது முப்படைகள், பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரிலும், சுற்றி வளைப்புக்களின் போதும் கைது செய்யப்பட்டவர்களும், இறுதி யுத்த்தின் போது அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவிப்புக்கு அமைய பலர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டோருமே காணாமல் ஆக்கப்பட்டோராகவுள்ளனர்.
சுமார் 16 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நிறுவனங்களினதும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களினதும் அறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது.
இதன் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இவர்களுக்கான தீர்வு என்பது தமிழ் மக்களின் மத்தியில் பதற்றத்தினையும், ஏமாற்றத்தினையும் கொடுத்து இன்று வரை அவை கானல் நீராகவே உள்ளது.
இந்த நிலையில் தமிழர் பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்ற புதைகுழிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயத்தில் நீதியான விசாரணையை நடத்தி பொறுப்பு கூறலை செய்ய ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தவறி இருக்கின்றது.
இதன் காரணமாகவே தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டங்களும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. அத்தகைய ஒரு போராட்டமே அணையா விளக்கு போராட்டம்.
1995, 1996 ஆம் ஆண்டுகளில்
யுத்தம் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற பல்வேறு கட்டுமான பணிகளின் போது வடக்கில் மனித புதைகுழிகள் சில கண்டு பிடிக்கப்பட்டன.
அதில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி, மன்னார் சதொச மனித புதைகுழி, செம்மணி மனித புதை குழி என்பன குறிப்பிடத்தக்கவை.
செம்மணி என்பது எவராலும் மறந்து விட முடியாத ஒரு இடம். ஒரு கறை படிந்த இடம் 1998 ஆம் ஆண்டில், செம்மணியில் மனிதப்புதைகுழி இருப்பதாக படுகொலைகளுக்காக விசாரணையில் இருந்த இலங்கை இராணுவ வீரர் ஒருவரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
1995, 1996 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளிடம் இருந்து அரச படையினரால் மீட்கப்பட்ட யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் உள்ள புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அங்கு சுமார் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1999 இல் பன்னாட்டளவில் கண்காணிக்கப்பட்ட அகழ்வாய்வில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் இரண்டு 1996 இல் காணாமல் போன ஆண்கள் என அடையாளம் காணப்பட்டது.
இந்த கண்டுபிடிப்புகளை அடுத்து ஏழு ராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை
1998 ஜூலை இல், இலங்கை இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, மாணவி கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்திரை கற்பழித்து படுகொலை செய்ததற்காக மரண தண்டனையை எதிர்கொண்டார்.
குடாநாட்டில் இருந்து காணாமல் போனவர்களின் உடல்கள் அடங்கிய புதைகுழிகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ராஜபக்சவும் அவரது இணைப் பிரதிவாதிகளும் இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பானதாகக் கூறப்படும் 20 பாதுகாப்புப் படை வீரர்களின் பெயர்களைக் கொடுத்தனர்.
ஆனால் முறையான ஆய்வுகளோ பக்கச்சார்பற்ற நீதியான விசாரணைகளோ இடம் பெறவில்லை. இதனையே செம்மணி சித்துபாத்தி புதிய புதைகுழி வெளிப்படுத்தி நிற்கின்றது.
இவ்வாறு செம்மணி படுகொலை விசாரணைகள் கிடப்பில் இருந்த நிலையில் செம்மணி சித்துபாத்தி பகுதியில் மண்டபம் அமைப்பதற்காக நிலத்தை அகழ்ந்த போது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அக் கட்சி உறுப்பினர் செய்த முறைபாட்டின் படி நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இடம்பெற்ற அகழ்வாய்வுகளின் போது இதுவரை 27 மனித எலும்பு கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இளம் சமுதாயம் தமிழ் தேசிய அரசியலில் இருந்து
அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்த போது ஐ.நாவினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணையா விளக்கு போராட்டம் செம்மணியில் இடம்பெற்றது.
இதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமிழரசுக் கட்சி, தமிழ்க் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
இன்றைய இளம் சமுதாயம் தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகி செல்லும் நிலையில் அவர்களையும் தமிழ் தேசிய அரசியலுக்குள் உள்வாங்கவும், கடந்த கால வரலாற்றை ஊடு கடத்தவும் இத்தகைய போராட்டங்கள் உதவுவதுடன், தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கையையும் அதற்கான மக்கள் திரட்சியையும் காட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பமாக இத்தகைய போராட்டங்களே அமைகின்றன.
ஆனால் போராட்ட களத்தில் இடம்பெற்ற சில குழப்பங்களும் அதன் பின்னுள்ள அரசியல் சுயநலன்களும் ஒட்டுமொத்த போராட்டத்தையே நலினப்படுத்தியுள்ளதுடன், எதிர்கால போராட்டங்களில் மக்கள் திரட்சி ஏற்படுத்துவதையும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளது.
யாழிற்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணி புதைகுழியையும் பார்வையிடுவார் என முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தகைய ஒரு இடத்தில் நீதிக்காக கட்சி பேதமின்றி பெருந்திரளான தமிழ் மக்கள் திரண்டு ஒற்றுமையாக தமது கோரிக்கையை முன்வைத்து இருக்க வேண்டும். மாறாக போராட்ட களத்திற்கு சென்ற தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவால் ஈபிடிபியுடன் இணைந்து யாழ் மாநகர சபையில் ஆட்சி அமைத்தமையை வைத்து விரட்டப்பட்டு இருந்தார்.
மறுபுறம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து கையளித்த மகஜரில் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களும் கட்சி தலைவர் என்ற வகையில் கையொப்பம் வைத்திருந்தார்.போராட்ட களத்தில் விரட்டப்படுகிறார். ஆனால் மகஜரில் கையொப்பம் தேவை. அப்படி எனில் இது உணர்த்துவது என்ன? சிலர் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அதற்காக தமிழரசுக் கட்சி ஈபிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தமை சரி என்பது அல்ல. போராட்ட களத்தில் நடந்த விடயம் பிழையான உதாரணம்.
மக்கள் அழுத்தம் கொடுத்து
கடந்த காலத்தில் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டங்களுக்கு ஆளும் தரப்பினர் செல்வதில்லை. மக்கள் அழுத்தம் கொடுத்து நிலையிலேயே சென்றுள்ளனர்.
ஆனால் அணையா விளக்கு நீதிப் போராட்டத்திற்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சென்ற போது அவர்களும் அங்கு நின்ற சிலரால் விரட்டப்பட்டுள்ளனர்.
அங்கு வந்தவர்களுக்கு அழுத்தம் கொடுத்து விசாரணையை நீதியாக துரிதமாக பக்கச்சார்பற்ற வகையில் மேற்கொள்ள அழுத்தம் கொடுத்திருக்கலாம். அவர்களும் வாக்குறுதி வழங்கினால் அதனை செய்யாது மக்கள் முன் செல்ல நெருக்கடிகளை எதிர் நோக்கி இருப்பர். ஆனால் நடந்தது வேறு.
ஐ..நா மனித உரிமைகள் ஆணையாளர் வருகை தந்து புதைகுழியை பார்வையிட்டதுடன் அஞ்சலியும் செலுத்தியிருந்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கே அழுத்தம் கொடுத்துள்ளதுடன்., உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த உதவுவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் எமது பொதுவான கோரிக்கை தொடர்பான இத்தகைய விடயங்களை விட போராட்ட களத்தில் இருந்து விரட்டப்பட்ட சம்பவம் தொடர்பான செய்திகளே ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், மக்களிடத்திலும் பேசு பொருளாக இருந்தது.
அப்படியெனில் அணையா விளக்கு போராட்டம் அதன் இலக்கை முழுமையாக அடைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் அதன் பின்னால் இருந்த குறுகிய அரசியல் இலாபம் தேட முனைந்த குழப்பவாதிகள் தொடர்பாகவும் சிந்திக்க தூண்டியுள்ளது என்பதே உண்மை.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 12 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
