கிழக்கு மாகாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் அமைக்கப்படவேண்டும்: ஆறுதிருமுருகன்
கிழக்கு மாகாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோளை விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (10.02.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி
இந்துக்களின் புனித ஸ்தலமாக காணப்படுகின்ற திருக்கோனேஸ்வரம் இன்னும் கடற் படையின் கட்டுப்பாட்டுக்குள்ளும் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலும் இருப்பதனால் திருக்கோனேஸ்வர ஆலயத்தை சுதந்திரத்தை பரிபாலனம் செய்ய முடியாத வகையில் தத்தளிக்கின்றார்கள்.
திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணியை இந்திய அரசாங்கம் பொறுப்பேற்று செய்தது போல, திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணியும் பெறுப்பேற்றுச் செய்யப்படவேண்டும். இது தொடர்பாக நாங்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்திய உயர்ஸ்தானிகர் திருக்கோணேஸ்வரம் சென்று எல்லாவற்றையும் பார்வையிட்டு செல்கின்றார்.
ஆலயப் பகுதியில் முறையற்ற வகையில தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களால் பெட்டிக் கடைகள் அமைக்கப்பட்டு, கோவில் பாதைகள் ஆக்கிரமித்துள்ளனர்.
இது குறித்து இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரமருக்கும் நாம் அறிவித்திருந்தோம். இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தபோதும், இது வரை நிரந்தரமான தீர்வு காணப்படவில்லை.

இந்தியத் துணைத்தூதரகம்
எனவே, திருக்கோணேஸ்வர திருத்தலத்தை மிக நீண்ட வரலாறு கொண்ட இந்த திருத்தலத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் முயற்சி எடுக்கவேண்டும். குறிப்பாக இந்திய அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை அமைக்கப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் இந்தியாவிற்கு தல யாத்திரை செல்வது என்றாலே மருத்துவத்திற்கு செல்வதாலேலே உயர் கல்விக்காக இந்தியா செல்வதென்றாலே பயண அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள கொழும்புக்கே செல்ல வேண்டியுள்ளது. இதனால் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றார்கள். இதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கிழக்கு மக்கள் சார்பாக வேண்டிக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்
யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள், தீர்க்கப்படாத தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்திய அரசிற்கு நெருக்கமான பிரமுகர் அண்ணாமலை ஆகியோர் பிரதமர் மோடிக்கு தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன், இருநூறு வருடங்கள் இலங்கை பொருளாதாரத்துக்கு உழைத்த மலையக மக்களுக்கு ஒரு துண்டு காணியில்லை. அவர்கள் தற்போதும் அடிமை வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.