நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி!
கொழும்புத் துறைமுக நகர செயற்கை கடற்கரைப் பகுதியில் கடல் உயிரனங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
சடலம் மீட்பு
கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் கடல் உயிரினங்களைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த மாணவன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடலினுள் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல்போன மாணவன் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து சுழியோடிகளின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று பிற்பகல் மாணவனின் சடலம் கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
24 வயதுடைய அஸ்கிரிய கம்பஹா பகுதியைச் சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று பொழுதுப் போக்குக்காக ஸ்னோர்கெல் என்னும் நீரினுள் சுவாசிக்க உதவும் கருவியை அணிந்து கடலின் உற்பகுதியை பார்வையிட்ட போதே, குறித்த மாணவன் காணாமல்போயுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும் அம் மாணவன் அணிந்திருந்த ஸ்னோர்கெல் கருவி உயிர் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுகப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.