ஐக்கிய மக்கள் சக்தி வீட்டின் உரிமை பத்திரம் தனது கையில்! - டயனா கமகே
ஐக்கிய மக்கள் சக்தி என்ற வீட்டின் உரிமை பத்திரம் தனது கையில் இருக்கின்றது என்பதை கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெரிய மழையில் வீதியில் தத்தளித்த சிலருக்கு தனது வீட்டில் இருக்க இடம் கொடுத்ததாகவும், தற்போது அந்த வீட்டின் சாவியை மாற்றி விட்டு, அது தம்முடைய வீடு எனக் கூறுவதாகவும் டயனா கமகே கூறியுள்ளார்.
கட்சியின் உரிமையாளர் என்ற வகையில் தான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள டயனா கமகே,
எனது கட்சியில் இருந்த என்னை நீக்கியுள்ளதாக கூறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வெட்கப்பட வேண்டும். என்னை நீக்கியது கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு கூட தெரியாது. இவர்கள் குழந்தைகளை போல் நடந்துக்கொள்கின்றனர்.
இது எனதும், எனது கணவருடையதுமான கட்சி. செய்து வரும் கேளிக்கூத்தை நிறுத்துங்கள். ஐக்கிய மக்கள் சக்திக்குள் போதுமான பிரச்சினைகள் உள்ளன.அந்த கட்சி பல துண்டுகளாக பிளவுப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரிடம் வேலைத்திட்டம் இல்லை என கட்சியினர் கூறுகின்றனர். சிலர் படைப்பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டு சென்றுள்ளனர்.
இங்குள்ளவர்களில் பாதிப்பேர் எனது கட்சி என்பதால் இங்கு வந்துள்ளனர்.இல்லையென்றால் பலருக்கு வேட்புமனு கிடைத்திருக்காது. கட்சியின் உரிமையுள்ள உறுப்பினரான நான் எப்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கின்றேன்.
மற்றவர்களை போல் என்னை பொம்மை போல் ஆட்டுவிக்க முடியாது. நான் அப்படி ஆடவும் மாட்டேன் எனவும் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.