நபரொருவர் மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரி தாக்குதல்
கிளிநொச்சி - முகமாலை வடக்குப் பகுதியில் நபரொருவர் மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரியாகத் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முகமாலை வடக்கு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக நேற்று இரவு 07.30 மணி அளவில் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த ஒருவர் மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரியாகத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதலினால் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமாலை வடக்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் விஜயகாந்த் வயது 47 என்பவர் இவ்வாறு காயமடைந்த நிலையில், பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாகப் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக முகமாலை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் களவுகள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதுடன், தற்பொழுது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள கிராம மக்கள் இதனை
உரியவர்கள் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.