“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, பாரதூரமானது! ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட் சமர்ப்பித்த அறிக்கையில் பாரதூரமான முரண்பாடுகள் இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகர் சபையில் முன்வைத்த அறிக்கையில் பாரிய முரண்பாடுகளும்; பலவீனங்களும் இருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மூன்று தொடர்ச்சியான தேர்தல்களில் இலங்கை நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தலையிடுவதைப் போன்று இந்த அறிக்கை அமைந்துள்ளதாக அமைச்சர் பேரவையில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டுள்ளார்
ஏனைய உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற விசாரணை நடைமுறையில் பாகுபாட்டை காட்டுவது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் அடித்தளத்தையே தாக்கும் செயலாகும்.
அத்துடன் இது நாடுகளின் இறையாண்மை சமத்துவம் தொடர்பான அத்தியாவசியக் கொள்கைகளை மீறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பலம் மற்றும் கௌரவம் என்பன சர்வதேச சமூகம், தார்மீக மற்றும் நெறிமுறை என்பவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
எனவே இந்த நம்பிக்கையை குறையாமல் தக்கவைத்துக்கொள்வது இன்றியமையாதது என்று இலங்கை நம்புவதாகவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் மேலோட்டமான முடிவுகள், அறிக்கையில் இடம் பெற்றிருப்பது ஆழ்ந்த வருத்தததுக்கு உரியது என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை அரசாங்கம், மீட்டெடுத்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், சமமான முறையில் நிலையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் உறுதியாக தீர்மானித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.