இலங்கை குறித்த புதிய தீர்மானம்.. தமிழ் மக்கள் மத்தியில் விதைந்துள்ள நம்பிக்கை
முன்னைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு தெரிவான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் தளர்வுப்போக்கைப் பின்பற்றி வந்தது போல் தெரிந்தது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.
இருந்தாலும், இந்த அரசாங்கமும் ஐ.நாவின் பொறப்புக்கூறல் செயற்றிட்டத்தை நிராகரித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டது.
இருப்பினும் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் இலங்கையில் ஆட்சிப்பீடமேறும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை முடக்கினாலும், ஏதேனுமொரு நாள் நீதியை அடைய முடியும் என்ற சிறுதுளி நம்பிக்கையைப் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் விதைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
போர்க்குற்றங்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் குறித்து ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பக அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் லூஸி மக்கேர்னனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும் தீர்மானம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் குறைந்தபட்சம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கின்றது. அதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது இலங்கையில் ஆட்சிப்பீடமேறும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை முடக்கினாலும், ஏதேனுமொரு நாள் நீதியை அடையமுடியும் என்ற சிறுதுளி நம்பிக்கையைப் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் விதைத்திருக்கின்றது.
இலங்கையில் ஆட்சிப்பீடமேறிய அரசாங்கங்கள் யுத்த காலத்தில் மீறல் குற்றங்கள் இடம்பெறவில்லை என மறுத்து வந்ததுடன் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இடையூறுகளை ஏற்படுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரச பாதுகாப்புத்துறையைப் பயன்படுத்தியும் வந்தது.
யுத்த காலக் குற்றங்கள் தொடர்பில் உள்ளக நீதிப்பொறிமுறையை நிறுவுவதாக அளித்த வாக்குறுதியையும், அது சார்ந்த கடப்பாட்டையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாததன் காரணமாகவே 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொறுப்புக்கூறல்
முன்னைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு தெரிவான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் இந்த விடயத்தில் தளர்வுப்போக்கைப் பின்பற்றுவதுபோல் தெரிந்தாலும், அந்த அரசாங்கமும் ஐ.நாவின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை நிராகரித்துள்ளது.
அதுமாத்திரமன்றி போரின் பின்னரான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதாகவும், முக்கிய மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருப்பினும், அவற்றில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே அடையப்பட்டுள்ளது.
இந்நிலையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக உண்மையைக் கண்டறிவதற்கான உள்ளகப்பொறிமுறையை வலுப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.
இலங்கையில் இதுவரை சுமார் 20 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அவற்றில் எந்தவொரு மனிதப்புதைகுழி தொடர்பிலும் வெற்றிகரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்" என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




