இலங்கை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழு ஆதரவு - ஜனாதிபதியிடம் ஐ.நா. ஆணையாளர் உறுதி
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய ஆணையாளர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகத் தெரிவித்த, வோல்கர் டர்க், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்துக்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினை
காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கில் காணாமல்போனவர்களின் உறவினர்கள்ளின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும், அவர்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்பார்க்கின்றது என்று ஆணையாளர் மேலும் கூறினார்.
தற்போதைய அரசியல் கலாசாரம் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயற்படத் தவறியுள்ளதால், காணாமல்போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஓர் அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாகத் தெரிவித்தார். நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கும் தனது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரசின் பிரதான நோக்கம்
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசின் பிரதான நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சவால்களை நன்கு புரிந்துகொண்டு, அந்த நோக்கத்திற்காக உறுதிபூண்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இலங்கையின் இந்த உண்மையான நிலைமையை உலகுக்குக் கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய - பசிபிக் பிரிவு பிரதானி ரோரி மங்கோவன், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரி எலேன் சேன், ஐ.நா அலுவலக சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் லைலா நசராலி, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகாரி அஸாம் பாக்கீர் மார்கர் மற்றும் ஊடக மற்றும் தகவல் அதிகாரி அந்தணி ஹெட்லி ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசின் சார்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |