ஆபத்து தொடர்பில் அறிந்தும் இலங்கைக்கு வரவழைக்கப்படும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள்
கொரோனா பரவுவதற்கான ஆபத்து மிக அதிகம் என்பதை நன்கு அறிந்த நிலையிலும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவழைக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு நாட்டில் பல இடங்களைப் பார்வையிடவும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
எனவே கொரோனா காரணமாக இறக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு கண்ணியமான அடக்கம் செய்வதற்கான உரிமையை இலங்கையர்கள் தேர்வு செய்வதை மறுப்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது. அதில் மேலும், விஞ்ஞான அறிவின் பின்னணியில், கொரோனாவினால் இறப்போரின் உடலங்கள் அடக்கம் செய்யப்படுவதில் எந்த விதமான ஆபத்தும் இல்லை.
எனினும வெளிநாட்டவர்களை இலங்கைக்கு சுற்றுலாவுக்காக அழைப்பதன் மூலம் ஆபத்து இருக்கிறது.
கொரோனா பரவலுக்கு மத்தியில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும், ஆபத்துகள் இருந்தாலும் அலுவலகங்கள் செயல்பட வேண்டும், வானூர்தி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும், துறைமுகங்கள் செயல்பட வேண்டும், பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விஞ்ஞான முறையின்படி இந்த அபாயங்களில் ஒரு வீதம் கூட இல்லாத உடல்களை அடக்கம் செய்வதில் மாத்திரம் ஏன் இந்த புறக்கணிப்பு என்று சுஹைர் கேள்வி எழுப்பியுள்ளார்.