உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் ஊடாக மிகப்பெரிய வியாபாரம்: அனுரகுமார குற்றச்சாட்டு
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் உக்ரைனில் இருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வந்ததன் பின்னணியில் மிகப் பெரிய வியாபாரம் நடப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல நாடுகள் விமான நிலையங்களை மூடியுள்ளதுடன், விமான பயணங்களை குறைத்துள்ளன.
அண்மையில் இங்கிலாந்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் வெளிநாட்டு பயணிகள் வருவதை தடுப்பதற்காக விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலைமையில், இலங்கையில் விமான நிலையங்களை திறக்க எடுத்த நடவடிக்கை மிகவும் பாரதூரமானது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து சுற்றுலாத்துறை மேம்படுத்தும் போர்வையில் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தலையிட்டு வியாபாரம் செய்கின்றார். உதயங்க வீரதுங்கவே இந்த சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல நடவடிக்கைகளில் ஒரு போக்குவரத்து சேவையினர் ஈடுபட்டுள்ள அதேவேளை அவர்கள் தெரிவு செய்யும் ஹோட்டல்களிலேயே இந்த சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுகின்றனர்.
உக்ரைனில் இருந்து வரவழைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் சிலர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனினும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க சென்ற உதயங்க வீரதுங்க உட்பட எவரும் இதுவரை தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.