தாக்குதல் எச்சரிக்கையுடன் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள பிரித்தானியா
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் தமது நாட்டவருக்கு, பிரித்தானியா வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம், எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனை ஒன்றில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள், முக்கிய நிகழ்வுகள், மத நிகழ்வுகள் உட்பட வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என்று அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயண ஆலோசனை
எனவே பிரித்தானிய குடிமக்கள் நெரிசலான பொது இடங்களைத் தவிர்க்கவும், தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் ஊடக அறிக்கைகளைப் புதுப்பித்த நிலையில் தெரிந்துக்கொள்ளவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் ஏற்படும் மோதல்கள் உலகம் முழுவதும் பதற்றங்களை அதிகரித்துள்ளன.
அல்-கொய்தா மற்றும் டேஷ் போன்ற பயங்கரவாத குழுக்கள், இந்த மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தங்கள் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஆகவே, இந்த மோதல், தனி நபர்களும் தாக்குதல்களை நடத்தத் தூண்டக்கூடும் என்று பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் எச்சரிக்கை
பயங்கரவாத தாக்குதல்கள் யூத அல்லது முஸ்லிம் சமூகங்களை அல்லது இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை குறிவைக்கலாம் என்று பயண ஆலோசனை கூறுகிறது.
தாக்குதல்கள் கண்மூடித்தனமாக,எச்சரிக்கை இல்லாமல் நிகழலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 2019,ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது, இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் 3 விருந்தகங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 8 பிரித்தானிய பிரஜைகள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |