பிரித்தானியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. பயங்கர கத்திக்குத்து தாக்குதலால் பரபரப்பு
புதிய இணைப்பு
பிரித்தானியாவின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டம் "கணிசமானது" (Substantial) என்ற நிலையிலிருந்து "தீவிரம்" (Severe) என்ற நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத பகுப்பாய்விற்கான கூட்டு மையம் (Joint Terrorism Analysis Centre) இந்த முடிவை எடுத்துள்ளது.
அச்சுறுத்தல் மட்டம் 'தீவிரம்' என மாற்றப்பட்டுள்ளதால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக (Highly Likely) உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
நேற்று நடந்த கத்திக் குத்துச் சம்பவத்தை பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் உத்தியோகபூர்வமாக ஒரு "பயங்கரவாதச் சம்பவம்" என அறிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், "தேசிய அச்சுறுத்தல் மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகக் கருதப்படுகிறது," எனத் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
லண்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
லண்டனின் பார்னெட்(Barnet) பகுதியில் ஹய்ஃபீல்ட் அவென்யூவில் புதன்கிழமை காலை சுமார் 11:16 மணி அளவில் நடந்த பயங்கர கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள், சிறப்பு ஆயுதப் படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பரபரப்பு சம்பவம்..
அங்கு படுகாயமடைந்து இருந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அப்போது, சம்பவ இடத்திற்கு அருகிலேயே சுற்றித்திரிந்த சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளையும் கத்தியால் குத்த முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 45 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை டேசர்(Taser) துப்பாக்கியை பயன்படுத்தி நிலைகுலைய செய்து பின்னர் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பின்னணி மற்றும் குடியுரிமை குறித்த விவரங்களை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.