உலகை அதிரச் செய்யும் எப்ஸ்டீன் கோப்புகள்! பக்கிங்ஹாம் அரண்மனையின் முக்கிய அறிவிப்பு
பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் (Jeffrey Epstein), தற்போது ‘ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்’ என்று அழைக்கப்படும் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து பிரித்தானியப் பொலிஸார் புதிய விசாரணைகளைத் தொடங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவின் வர்த்தகத் தூதுவராக இருந்தபோது, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் தொடர்பான இரகசிய மற்றும் முக்கியமான அரசாங்கத் தகவல்களை எப்ஸ்டீனுக்குப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டீன்
இது தொடர்பாக ‘தேம்ஸ் வேலி’ (Thames Valley) பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் நடத்தைகள் குறித்துத் தொடர்ந்து வெளிவரும் முறைபாடுகள் குறித்து அரசர் மூன்றாம் சார்லஸ் மிகுந்த கவலையடைந்துள்ளார்.

இந்தப் புதிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆண்ட்ரூதான் பதில் அளிக்க வேண்டும் என்றாலும், தேம்ஸ் வேலி பொலிஸார் எங்களை அணுகினால் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆண்ட்ரூவிடமிருந்து அனைத்து அரசப் பட்டங்களும் பறிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது ஒரு சாதாரணக் குடிமகனாகவே சட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்.
சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டைன் கோப்புகள்! 169 முறை இடம்பெற்றுள்ள தலாய் லாமாவின் பெயர்- வெளியாகியுள்ள அறிக்கை
அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடி
இதற்கிடையில், அமெரிக்க நீதிமன்ற ஆவணங்களிலிருந்து வெளியான புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆண்ட்ரூவை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளன.
அவர் எப்ஸ்டீனின் விருந்தினராக இங்கிலாந்தின் ராயல் லாட்ஜில் (Royal Lodge) தங்கியிருந்தபோது, மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் முறைபாட்டையும் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்ரின் ஆகியோரும் இத்தகைய வெளிப்பாடுகளால் "மிகுந்த அதிர்ச்சியும் கவலையும்" அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக்கு ஆண்ட்ரூ ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சூழலில், இந்த விவகாரம் பிரித்தானிய அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.