தமிழர் பகுதியில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாள்வெட்டு சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரப் பகுதி மற்றும் மாகியப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளன.
மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுக்களே வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாள்வெட்டு சம்பவங்கள்
மானிப்பாயில் நேற்று(14) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மானிப்பாய் நகரப் பகுதியில் உள்ள வணிக நிலையத்தில் பணிபுரியும் தெல்லிப்பளையை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே கையில் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகியுள்ளார்.
மானிப்பாய் நகரப் பகுதியில் நேற்று மாலை 6.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மானிப்பாய்-மாகியப்பிட்டி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் சண்டிலிப்பாயை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
சூரிய உதயம் சனசமூக நிலையம் அருகில் நின்றிருந்த இளைஞன் மீது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இளைஞர் படுகாயமடைந்ததுடன், அவரது விரல் துண்டாக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் வாள் வெட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்தி-ராகேஷ்