தமிழர் பகுதியில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் (Photos)
நாடளாவிய ரீதியில் பல குற்றச் செயல்கள், திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்கேணி பிரதேசத்தில் கோழி பண்ணை ஒன்றில் இருந்து 101 கோழிகளை திருடிச் சென்ற இருவரை கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவற்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இருந்து கடந்த மாதம் 20 ம் திகதி இரவு 101 கோழிகள் திருட்டுப்போயிருந்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சிசிடிவி கமரா மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொள்ளையர்கள் தலைமறைவாகிவந்துள்ள நிலையில் நேற்று இரவு நாவற்கேணி பகுதியில் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் நாவற்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர்களுக்கு எதிராக பல வழக்குகள் இருப்பதாகவும் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி-தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்கவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, பல திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களால் களவாடப்பட்ட பல பொருட்களும் தருமபுரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், துவிச்சக்கரவண்டிகள் இரண்டும், தொலைக்காட்சி பெட்டி ஒன்றும், மடிக்கணினி ஒன்றும், தங்கச்சங்கிலி ஒன்றும், தோடு இரண்டும், கைத்தொலை பேசிகள் நான்கும் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி - வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 வரும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.
செய்தி:எரிமலை