நாட்டில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகளில் பலர் கைது
நாட்டில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்.மாங்குளம் பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்த இளைஞனை விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக மாங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கஞ்சா வாங்கி வந்த இளைஞனை பின்தொடர்ந்து வந்த விசேட அதிரடிப்படையினர் நீர்வேலி - கரந்தன் சந்திப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனிடம் சுமார் 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ள விசேட அதிரடிப்படையினர், சந்தேகநபரை கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்தி: கஜிந்தன்
களுவாஞ்சிக்குடி
கொக்கட்டிச்சோலை - காஞ்சரம்குடா பகுதியில் இருந்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் பிரிவிலுள்ள மகளூர், நாகபுரம் பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் கசிப்பு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (26.11.2022) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெருமளவிலான கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள், மோட்டர் சைக்கிள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மோட்டர் சைக்கிளில் சுமார் 40 லீட்டர் கசிப்பை வியாபாரத்துக்காக எடுத்துவந்த நிலையில் பழுகாமம் பகுதியில் வைத்து 3 பேரை கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் 2 மோட்டர்சைக்கிள்களை மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மகளூர், நாகபுரம் பகுதிகளில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிடும் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வீடுகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 வீடுகளை முற்றுகையிட்டு அங்கு ஒரு பெண் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் பெருமளவிலான கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களான எரிவாயு கொள்கலன்களை மீட்டுள்ளனர்.
இதேவேளை, பழுகாமம் பகுதியில் இருந்து களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு மோட்டர்சைக்கிளில் கசிப்பு கடத்திய ஒருவரை பட்டிருப்பு பொலிஸ் சோதனைசாவடியில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவ்வாறே கசிப்பு கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பவன்