கிண்ணியாவில் 24 மணித்தியாலத்திற்குள் கோவிட் தொற்றால் இருவர் பலி
திருகோணமலை - கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இருவர் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக திருக்கோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இன்று (12) கோவில் -19 தொடர்பிலான அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 1997 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் 22 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 36 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ,இதுவரைக்கும் திருகோணமலை சுகாதார வைத்திய பிரிவில் ஏழு பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
மேலும் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று 12ஆம் திகதி வரைக்கும் 556 பேர் திருகோணமலை மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் 24 மணித்தியாலத்திற்குள் 204 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கிண்ணியாவில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கோவிட் தொற்றாளர்களுக்காக சிகிச்சை அளிக்கும் வகையில் தனிமைப்படுத்தல் நிலையத்தை கிண்ணியா நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலை,பிரதேச சபையின் விருந்தினர் விடுதி மற்றும் சமூக பராமரிப்பு நிலையம் ஆகிய மூன்று இடங்களையும் தெரிவு செய்துள்ளதாகவும், தெரிவித்ததார்.
இவைகளை நடைமுறைப்படுத்த பிராந்திய சுகாதார பணிமனை, கிண்ணியா பிரதேச சபை மற்றும் இரானுவத்தினர் ஒன்றிணைந்து செயல்பட இன்று (12) இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது பிரிகேடியர் சாந்த பெரேரா, பிராந்திய சுகாதார பணிப்பாளர்
வைத்தியர் கொஸ்தா, சுகாதார வைத்திய அதிகாரிகளான வைத்தியர் றிஸ்வி, வைத்தியர்
அஜித், பிரதேச சபைத் தவிசாளர் நிஹார் மற்றும் பிரதேச செயலாளர்
எம்.எச்.முகம்மது கனி ஆகியோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.