இந்தியா சென்ற யாழ் கடற்றொழிலாளர்கள் இருவர் கைது
சீரற்ற காலநிலை காரணமாக தமது படகு கவிழ்ந்ததையடுத்து தமிழகம், நாகப்பட்டினம், சிறுதலைக்காடு என்ற கிராமத்துக்கு சென்ற இலங்கை கடற்றொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் பலாலியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்றதாக இவர்கள் கூறியுள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக அவர்களின் படகு, சர்வதேச எல்லையை தாண்டி இந்திய கடல் பகுதிக்குள் சென்று அதிகாலை 3 மணியளவில் கவிழ்ந்துள்ளது.
இதனையடுத்து சுமார் 30 மணிநேரம் நீந்தி இந்தியக் கடற்கரைக்கு அருகில் சென்றதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளில் வந்த தமிழக கடற்றொழிலாளர்கள் சிலரிடம் தங்களை ஏற்றிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் அந்த இருவரும் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்தநிலையில் சிறுதலைக்காடு பகுதியை சேர்ந்த உள்ளூர் கடற்றொழிலாளர்கள், இந்திய கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் இவர்களை கண்டு,தமது கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் கடற்றொழிலாளர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.