கடற்தொழிலாளர் போராட்டத்திற்கு மன்னார் மாவட்டம் பூரண ஒத்துழைப்பு: மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம்
முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் அச்ச நிலையை போக்க கூடியவாறு கடற்றொழில் அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லையெனில் தேசிய ரீதியாக போராட்டத்தை முன்னெடுக்க மன்னார் மாவட்டமும் முழு பங்களிப்பை வழங்கும் என மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்தொழிலாளர்களை அழைத்து நேற்றைய தினம் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பாகவும், மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் நாங்கள் ஒரு கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளோம்.
மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் |
வர்த்தக நடவடிக்கை
இலங்கையில் தற்போது கொலன்னாவையில் வழங்கப்பட்டு வருகின்ற வர்த்தக நடவடிக்கைக்கான எரிபொருளின் பெறுமதி 464 ரூபாவாக காணப்படும் நிலையில் அந்த பெறுமதிக்கே எரிபொருளை மீனவர்கள் பெற்றுக் கொள்வதாயின் அதற்கு உரிய ஏற்பாட்டை செய்து தருவதாக மாவட்டச் செயலாளர் கூறியதற்கு இணங்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அதனைப் பெற்றுக் கொள்ள பெரும்பாலான மீனவ கூட்டுறவு சங்கங்கள் கருத்தை முன்வைத்திருந்தாலும் அவ்வாறான எரிபொருளை எதிர்காலத்தில் அரசாங்கமானது விலையை நிர்ணயித்து மீனவர்களுக்கு வழங்க முன்வரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அப்பால் கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய ரீதியில் உள்ள கடற்தொழிலாளர் பிரச்சினைகள் குறிப்பாக எரிபொருள் பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும் என்று கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஊடக வெளியீடு
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் உடனடியாக கடற்தொழில் அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டு அவர் மூலமாக பத்தாயிரம் மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய்யை சி.எஸ்.சி என்னும் எரிபொருள் நிரப்பு நிலையமூடாக கடற்தொழிலாளர்களுக்கு வழங்கும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த பத்தாயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை முழுவதும் உள்ள கடற்தொழிலாளர்களுக்கு வழங்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.
இந்த பத்தாயிரம் மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் வந்ததன் பிறகு தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை நடைபெறுமா என்ற கேள்வியும் இருக்கிறது.
இவ்வாறு 464 ரூபாய்க்கு மண்ணெண்ணெய்யை கொள்வனவு செய்வது தமக்கு பொருத்தமான விடயம் தான் என்று பெரும்பாலான கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்தொழில் அமைச்சர்
மாவட்டத்தில் இருக்கும் கடற்தொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினையை நிறைவு செய்ய மாவட்டச் செயலாளர் பொருத்தமான நடவடிக்கையை கடற்தொழிலாளர்களுக்கு பெற்று தருவதாயின் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெளிவாக கூறியிருக்கின்றோம். இருப்பினும் கடற்தொழில் அமைச்சரிடம் மன்னார் மாவட்டம் தொடர்பாக நாங்கள் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி வடபகுதி மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ஆதரவு பெருவாரியாக எமக்கு கிடைத்துள்ளது.
இலங்கையை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் சீன உதவியை விட இந்திய உதவிகளே எமக்கு அதிகம் கிடைத்துள்ளன. இடர் காலத்தில் அவர்களால் வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பெறுமதியான உதவிளை நாங்கள் பெற்றுள்ளோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படுகின்ற ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் இந்தியாவே குரல் கொடுத்து வருகின்றது. தமிழக மக்கள் எமக்கான நீதியை பெற்றுத்தர இன்று வரை போராடி வருகின்றனர்.
இலங்கை அரசாங்கம்
இடைக்கிடையே கடற்தொழிலாளர்கள் தொடர்பாக எமக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டாலும், ஒட்டுமொத்தமாக தமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் என்று பார்க்கின்ற போது நாங்கள் இந்தியாவிற்கு துரோகத்தை செய்து விடக்கூடாது.
சீனா தேவைக்கு மாத்திரம் ஒரு நாட்டை பயன்படுத்துகின்றது. தமது பணத்தை வழங்கி அதனூடாக ஒரு நாட்டை எவ்வாறு அடிமைப்படுத்தி ஆட்சி செய்யலாம் என்ற சிந்தனையே சீனாவிற்கு உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு அவ்வாறான ஒரு தேவை இல்லை.
தேவை அறிந்து உதவி செய்யக்கூடிய அல்லது உணர்வு ரீதியாக உதவி செய்யக்கூடிய
வல்லமை இந்த மக்களிடம் உள்ளது.
எனவே இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் துரோகத்தை செய்து விடக்கூடாது. தமது
நாட்டிற்குள் வந்து இன்னும் ஒரு நாடு உளவு பார்ப்பதை ஏற்றுக் கொள்ளவும்
முடியாது என தெரிவித்துள்ளார்.