திருகோணமலையில் இரு வைத்தியர்களுக்கு, மூதூரில் குடும்பநல உத்தியோகத்தருக்கும் கொரோனா தொற்று உறுதி!
திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் இருவருக்கும், மூதூர் வைத்தியசாலை குடும்பநல உத்தியோகத்தருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்குக் கடமை நிமித்தம் சென்றிருந்தபோது அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.
இவ்வைத்தியர்கள் கிண்ணியா, மூதூர் பகுதியைச் சேர்ந்த 29 வயது உடையவர்களெனவும் தெரியவருகின்றது.
மூதூர் வைத்தியசாலையில் கடமையாற்றும் 53 வயதுடைய குடும்பநல உத்தியோகத்தருக்கு நேற்று (26) அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
அத்துடன் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் (26ம்) திகதி வரைக்கும் 97 பேர் மூதூர் மற்றும் ஜமாலியா பகுதிகளில் இனங் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 120 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 3420 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 30969 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 973 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.