ஒரே நாளில் இரண்டு மரணங்கள்! 28 தொற்றாளர்கள் - மட்டக்களப்பின் கோவிட் நிலவரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மூன்றாவது கோவிட் அலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 330பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏழு மரணங்கள் இந்த மூன்றாவது அலையில் சம்பவித்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 02 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆரையம்பதி சுகாதார பிரிவில் 08 பேரும், மட்டக்களப்பு மற்றும் ஓட்டமாவடி சுகாதார பிரிவில் 07 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார பிரிவில் 03 பேரும், வாழைச்சேனை, பட்டிப்பளை, செங்கலடி ஆகிய சுகாதார பிரிவுகளில் தலா ஒருவரும் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று ஒருவர் மட்டக்களப்பு சுகாதார பிரிவிலும் ஒருவர் ஆரையம்பதி சுகாதார பிரிவிலும் மரணித்துள்ளனர்.ஆரையம்பதி சுகாதார பிரிவில் மரணித்தவர் அவர் மரணித்ததன் பின்னரே அவர் கோவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1313 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 16 மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
மூன்றாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 330 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 07 மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 54 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது.
இதில் வாழைச்சேனை பகுதியில் அதிகளவாக 129 ஆகவும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 105 ஆகவும் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் ஏற்படும் மரணவீதமானது 2.1ஆக காணப்படுகின்றது. இது தேசிய ரீதியில் 0.6ஆக காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரண வீதம் மூன்று மடங்கிற்கும் அதிகமாக காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மரண வீதம் அதிகமாகவுள்ளதன் காரணமாக பொதுமக்கள் இதன் ஆபத்து நிலையினை அறிந்துகொண்டு சுகாதார நடைமுறைகளை இறுக்கமான முறையில் பின்பற்றவேண்டும்.
காய்ச்சல், சுவாசம் தொடர்பான குணம்குறிகள் இருமல், தடுமல், மூச்சு கஸ்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியரை நாடி சரியான சிகிச்சைகளைப்பெற்றுக்கொள்ளவும்.
அத்துடன் வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்கள், சென்றுவந்தவர்கள், அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தாமாக முன்வந்து உங்களுக்குரிய சுகாதார பிரிவுக்கு சென்று அன்டிஜன், பீசிஆர் பரிசோதனைகளை செய்வதன் மூலம் உங்களையும் நாட்டு மக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கோவிட் சிகிச்சை நிலையங்கள் உள்ளன. பெரியகல்லாறு, காத்தான்குடி, கரடினயனாறு ஆகிய வைத்தியசாலைகளில் இந்த சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் சிகிச்சை பெறுபவர்களின் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் இவர்கள் பத்து தினங்களின் பின்னர் வீடு செல்ல முடியும்.
அவர்களுக்கான போக்குவரத்துகள் அந்ததந்த மாவட்டங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டியுள்ளது. இருந்தும் அவர்கள் வாகனங்களை அனுப்பாத சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்கள் வாகனத்தின் மூலம் அவர்களை அங்கு அனுப்பவேண்டிய நிலையிருக்கின்றது. இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரை அனுப்புவதற்கு சிறு தாமத நிலையேற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.