ருமேஷ் தரங்கவின் சாம்பியன் ஈட்டிகள் சேதம்! விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை
துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர், உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து, அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலக தடகளத்தின் Ultimate Championship போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இலங்கை வீரர் ருமேஷ் தரங்க, நாடு திரும்பியபோது அவரது விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம்
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் தகவலின்படி, நேற்று (15) சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற கேணல் ரஞ்சித் ராஜசிங்க மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் துருக்கி ஏர்லைன்ஸ் பிரதிநிதிகள் தமது வருத்தத்தைத் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணைகளை முன்னெடுக்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இழப்பீடு வழங்க நடவடிக்கை
சேதமடைந்த உபகரணங்களுக்கான இழப்பை முறையாக மதிப்பீடு செய்து, வீரருக்கு ஏற்பட்ட இழப்புக்கு விரைவாக இழப்பீடு வழங்குவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைப் பெறவும் ருமேஷ் தரங்க பயன்படுத்திய ஈட்டிகள் சிலவும் போக்குவரத்தின்போது சேதமடைந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பல சர்வதேச பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னர் அவர் அண்மையில் இலங்கை திரும்பியிருந்தார்.
அவரது இந்த வெற்றிகள் எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக தடகளப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் வெற்றி வாய்ப்புகள் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.