ட்ரம்ப் - சீ ஜின்பிங் சந்திப்பு: சீனா முன்வைக்கும் தாய்வான் விவகாரம் - உலக நாடுகள் எதிர்பார்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் பெய்ஜிங்கிற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ பயணத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான சந்திப்பில் தாய்வான் விவகாரம் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் எனத் தெரியவருகிறது.
கடந்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற சந்திப்பில் இவ்விவகாரத்தை ஒதுக்கி வைத்திருந்த சீனா, இம்முறை தாய்வானை தனது "முக்கிய நலன்களின் மையம்" (Core of core interests) எனக் குறிப்பிட்டு, அதனை விவாதப் பட்டியலில் முதலிடத்தில் சேர்த்துள்ளது.
குறிப்பாக, தாய்வான் சுதந்திரத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கக் கூடாது என்பதை ட்ரம்ப்பிடம் சீ ஜின்பிங் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் "ஒரே சீனா" (One China) கொள்கையின்படி, தாய்வானின் இறையாண்மை குறித்து அமெரிக்கா நேரடியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றாலும், தாய்வான் தனது தற்காப்பை உறுதிப்படுத்த இராணுவ ரீதியாகத் தொடர்ந்து உதவி வருகிறது.
அமெரிக்காவின் ஆயுதங்கள்..
சமீபத்தில் தாய்வானுக்கு 11 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது, சீனாவைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து அதிகளவிலான விமானங்கள் மற்றும் விவசாயப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பதிலாக, தாய்வான் மீதான தனது பிடியைத் தளர்வு செய்ய ட்ரம்ப் முன்வருவாரா என்று தைபே (Taipei) அரசு மிகுந்த கவலையுடன் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.
தாய்வான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும், அது ஆசியப் பிராந்தியத்தில் வொஷிங்டனின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த கேள்விகளை எழுப்பும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதேவேளை, உலகின் முன்னணி செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தி மையமாகவும், சீனாவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான அமெரிக்காவின் முக்கிய உளவுத் தளமாகவும் தாய்வான் விளங்குவதால், இவ்விவகாரத்தில் அமெரிக்கா விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
எனினும், பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்டச் சந்திப்பு ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் எதிர்கால அரசியலைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.