மத்திய கிழக்கிற்குள் அதிரடியாக களமிறங்கிய USS George HW Bush.. அதிகரிக்கும் பதற்றம்!
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் திட்டம் தமக்கு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இராணுவ கட்டமைப்பு ஏற்கனவே வழக்கமான போர் முறைகள் மூலம் சிதைக்கப்பட்டுவிட்டதால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை என்று அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
அணு ஆயுதங்கள் யாராலும் பயன்படுத்தப்படக் கூடாத ஒன்று என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது..
இருப்பினும், ஈரானுக்கான காலக்கெடு முடிவடையப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானியத் தலைமை பலவீனமடைந்துள்ளதாகவும், அந்நாட்டின் மீதான பொருளாதார மற்றும் இராணுவ முற்றுகை மிகவும் வலுவாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ள ஈரானுக்கு அதிக காலம் இல்லை என்பதை "கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது" (The clock is ticking) என்ற வாசகத்தின் மூலம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான 'யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்டபிள்யூ புஷ்' (USS George HW Bush) அப்பகுதிக்கு சென்றடைந்துள்ளது.
வெடிப்புச்சத்தங்கள்
இதன் மூலம் அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ பலம் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானியப் படகுகளைக் கண்டதும் சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் மர்மமான முறையில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள சூழலில் இந்தச் சத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த வெடிப்புகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது இழுபறியில் உள்ள நிலையில், ஈரானின் பிடிவாதம் அந்நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.