அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை இரத்து செய்யும் ட்ரம்பின் முயற்சி! உயர் நீதிமன்றத்தில் பின்னடைவு
பிறப்புரிமை குடியுரிமை' (Birthright Citizenship) சட்டத்தை ரத்து செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, ஒன்பது நீதியரசர்கள் கொண்ட அமர்வில் பெரும்பாலானோர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வாதங்களுக்கு உடன்படவில்லை. ஒரு அமர்வு, ஜனாதிபதி நேரில் முன்னிலையாகி விசாரணையை கவனித்தது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு - சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் எண்ணெய் விலையில் பதிவாகிய திடீர் மாற்றம்
நிரந்தர குடியுரிமை
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின்படி, அமெரிக்க மண்ணில் பிறக்கும் எவரும் அந்த நாட்டின் குடிமகனாகக் கருதப்படுவர் என்ற விதி நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள நிலையில், ட்ரம்ப் தனது நிர்வாக ஆணையின் மூலம் இதனை மாற்ற முயன்றார்.

பெற்றோர்களில் ஒருவராவது அமெரிக்க குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியுரிமை (Green Card) பெற்றவராகவோ இருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது ட்ரம்ப்பின் வாதமாகும்.
ஆண்டுதோறும் சுமார் 3,00,000 முதல் 4,00,000 வரை சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த குடியுரிமை கிடைப்பதாக சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அரசியலமைப்பின் தெளிவான விதிகளை நிர்வாக உத்தரவின் மூலம் மாற்ற முடியாது என நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரலாற்று பின்னணி
குறிப்பாக, கருப்பு இனத்தவர்களுக்கும் ஆசிய வம்சாவளியினருக்கும் குடியுரிமையை உறுதிப்படுத்தவே இந்த 14-வது திருத்தம் கொண்டுவரப்பட்ட வரலாற்று பின்னணியை சட்ட வல்லுநர்கள் நினைவூட்டியுள்ளனர்.
இந்த விசாரணையின் போது நீதியரசர்கள் காட்டிய எதிர்மறையான போக்கு ஜனாதிபதி ட்ரம்ப்பை அதிருப்தியடைய செய்துள்ளது.

தனக்கு எதிராக கருத்து தெரிவித்த நீதியரசர்களை "முட்டாள் மக்கள்" என்றும் "தேசபக்தி இல்லாதவர்கள்" என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
குடியேற்றக் கொள்கைகளில் ட்ரம்ப்பின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு உயர் நீதிமன்றம் இதுவரை ஆதரவாக இருந்தபோதிலும், நாட்டின் அடிப்படையான பிறப்புரிமை குடியுரிமை விவகாரத்தில் நீதித்துறை அவருக்கு எதிராக திரும்பியுள்ளமை அவரது குடியேற்றத் தடுப்பு நிகழ்ச்சி நிரலுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாலை இடம்பெற்ற கொடூரம்: கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இரட்டை கொலை - ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்...!