ஈரான் விசாக்களுக்கு தடை விதித்த ட்ரம்ப் - உலக கிண்ண போட்டிகளில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம்
2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இதனை நடத்துகின்றன.
இதன்படி, ஜூன் 11 அன்று மெக்சிகோ நகரில் உலகக்கிண்ண போட்டிகள் தொடங்கவிருக்கும் சூழலில், கடுமையான விசா விதிமுறைகள், அதிகப்படியான விசா கட்டணங்கள் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது தொடுத்துள்ள போர் போன்ற காரணங்களால் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கான ஆர்வம் பெருமளவில் குறைந்துள்ளது.
மொட்டுக் கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா திஸ்ஸகுட்டியாராச்சி! அவருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புக்கள்...
குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெற்ற ஈரான் தேசிய கால்பந்து அணி, போட்டிகளில் பங்கேற்பதே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
விசாக்களுக்கு தடை விதித்த ட்ரம்ப்
கடந்த ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அவசர உத்தரவின்படி, ஈரானை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடாகக் குறிப்பிட்டு அந்நாட்டு மக்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, ஈரான் வீரர்கள் பயிற்சி பெறும் அசாடி மைதானமும் குண்டுவீசி அழிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரான் வீரர்கள் சமீபத்திய நட்புமுறை போட்டியின் போது பாடசாலை பைகள் ஏந்தி தங்களது அஞ்சலியை செலுத்தினர். விசா சிக்கல்கள் காரணமாக ஈரான் அணி தற்போது தனது பயிற்சி முகாமை மெக்சிகோவிற்கு மாற்றியுள்ளது. ரசிகர்களைப் பொறுத்தவரை, ஈரானில் இருந்து அமெரிக்கா செல்வது மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது.
நேரடி போக்குவரத்து வசதிகள் இல்லாதது மற்றும் அமெரிக்கா சென்று திரும்பினால் ஈரான் அரசு உளவு பார்த்ததாகக் கூறி மரண தண்டனை விதிக்கும் என்ற அச்சம் ரசிகர்களிடையே நிலவுகிறது.
உலக கிண்ண கால்பந்தாட்டம் விளையாட்டு தடுமாற்றம்
மேலும், போர்க்காலத்தில் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) ஜனாதிபதியைச் சந்தித்ததாகக் கூறி ஈரானின் முன்னணி வீரர் சர்தார் அஸ்மூன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விசா கெடுபிடிகள் ஈரான் அணிக்கு மட்டுமல்லாது, சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரர் ப்ரீல் எம்போலோ மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர், வீரர்கள் சிலருக்கும் அமெரிக்கா மற்றும் கனடா செல்வதற்கான பயண அனுமதியில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம், கானா நாட்டைச் சேர்ந்த 150 ரசிகர்களின் விசா விண்ணப்பங்கள் ஒரே நேரத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
உலகக்கிண்ணத்துக்கான விசா விண்ணப்பக் கட்டணம் மற்றும் கனடா விசா கட்டணம் ஆகியவை சேர்த்து பல ஆப்பிரிக்க நாடுகளின் சராசரி மாத வருமானத்திற்கு நிகராக உள்ளதால், சர்வதேச விளையாட்டு வழக்கறிஞர்கள் இது போன்ற உலகளாவிய போட்டிகளில் அனைவருக்குமான சம வாய்ப்பு மற்றும் உள்ளடக்கிய சூழல் மறுக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இத்தகைய கடுமையான அணுகுமுறைக்கு மாறாக, மெக்சிகோ மிகவும் எளிதான விசா நடைமுறைகளைக் கொண்டுள்ளதால் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் ரசிகர்கள் அங்கு தங்களது ஆதரவை வழங்கச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
விளையாட்டு என்பது மக்களை இணைக்கும் ஒரு சக்தியாகக் கருதப்பட்டாலும், தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் போர்ச் சூழல் இந்த உலகக்கோப்பையின் மகிமையைக் குறைத்துள்ளதாக விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.