திருகோணமலை மாநகரசபை மேயர் விவகாரம் தொடர்பில் கடுமையாக எச்சரித்துள்ள சுவாமி சங்கரானந்தா
திருகோணமலை மாநகரசபை மேயரை தெரிவு செய்யும் விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியை குறிப்பிட்டு கனடாவில் வசிக்கும் சுவாமி சங்கரானந்தா எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர், "திருகோணமலை மாநகரசபையை வரலாற்றில் முதன்முறையாக நிறுவப்பட உள்ள தேர்தலில், தமிழ் மக்கள் பெருமகிழ்ச்சி கொள்வதற்கான பல முன்னேற்றமான முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
தேர்தல் முடிவுகள்
அதாவது தமிழர்களின் தேசியக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி 8,495 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3,500 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் வெற்றி பெற்றுள்ளன என்பதோடு, தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களின் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2,435 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் வெற்றி கொண்டுள்ளது.
இதனைவிட சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி 5,825 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும், சுயேட்சைக் குழு 2, 747 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும், சுயேட்சைக் குழு 3, 514 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும், மற்றுமொரு சிங்கள தேசிய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 503 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும், பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை, கடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த தேர்தலில் 9 ஆசனங்களை பெற்றுக் கொண்டாலும், அந்த கட்சி திருகோணமலை மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கு தேவையான 13 ஆசனங்கள் இல்லாத காரணத்தால், சமரசம், நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது.
உட்கட்சிப் போட்டிகள்
அவ்வாறான இந்த தருணத்தில் இந்த யாதார்த்தத்தை உணராது, அந்த கட்சிக்குள் இருக்கும் ஒற்றுமையின்மை, உள்ளக சிக்கல்கள், மற்றும் மேயர் பதவிக்கான உட்கட்சிப் போட்டிகள் என்பன, அந்த கட்சி வெற்றி பெற்ற நிலையிலும், அந்த கட்சியை குழப்பமடையச் செய்ய வைத்துள்ளன.
கடந்த காலங்களில் ஊழல் மற்றும் சமூக ஒழுக்கக் குறைபாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கொண்ட 72 வயது நிரம்பிய கந்தசாமி செல்வராஜா என்ற சுப்ரா திருகோணமலை மாநகர சபை மேயர் ஆவதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் நகரசபை உறுப்பினர், தலைவர், உபதவிசாளர் மற்றும் தவிசாளர் என்று பதவிகளில் இருந்த சுப்ரா மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளும், சுப்ரா பதவியிலிருந்த காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநரிடம் பதவி துஷ்பிரயோக குற்றச்சாட்டை, ஊர்வலமாக சென்று மக்கள் முறையிட்டனர் என்பதுவும், அத்தோடு இவரது பதவித் துஸ்பிரயோகம் காரணமாக இவர் மீது நகர சபை ஊழியர்களால், அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டு, எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல சமூக சீர்கேட்டுக் குற்றச்சாட்டுகள், மற்றும் தகுதியான வேட்பாளர்களை தடை செய்தது போன்ற, இன்னும் பல குற்றச்சாட்டுகளும் இவர் மீது உள்ள நிலையில், இத்தகைய பின்னணியுள்ள இவ்வாறான நபர் மீண்டும் மேயராக முன்வைக்கப்படுவது, மக்கள் பொதுநலனுக்கும் கட்சியின் நற்பெயருக்கும் களங்கத்தை உண்டாக்கும் என்ற என் உறுதியான கருத்தை இந்த சிவனடியான் உறுதியாக பதிவாக்குகின்றேன்.
இந்த நிலையில், புதிய தலைமுறையினருக்கான சிறந்த வாய்ப்பாக படித்து பட்டம் பெற்ற, மக்கள் பணி செய்துவரும், முப்பது வயதுடைய உதயகுமார் அஜித்குமார் போன்ற இளம் சமூக ஆர்வலர், பட்டனத்தெரு பெருந்தெரு வட்டாரத்தில் வெற்றி பெற்றது வரவேற்கத்தக்க விடயமே என்றாலும், முதல் முறையாக வெற்றி பெற்ற இவர் தன்னை மேயராக முன் நிறுத்துவது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றது என நான் கருதுகின்றேன்.
குகதாசன் எம்பி
இவரது வேட்புமனு விடயமாக, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், கனடாவிற்கு வந்திருந்த போது, படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரீதியில், நான் இவரது பெயரை அவரிடம் பரிந்துரை செய்ததும், அவர் வேட்புமனு தாக்கல் செய்தபின் எனது ஆசிகளை அவருக்கு அளித்ததும் உண்மையே என்றாலும், தமிழரசு கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்து எந்த ஊதியமுமின்றி பங்களித்தவர்களை ஒதுக்கி, நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனிடம் ஊதியம் பெற்று வரும் ஒருவரை உடனடியாக மேயர் பாகமாக முன்வைப்பது, அதிகப்படியான பேராசையை பிரதிபலிக்கிறது.
இதனை அவருக்கு சுட்டிக்காட்டி, இவர் மேயராக வருவதற்காக, இவரது ஆதரவாளர்கள் சமூகவாரியாக இவர்களது சமூகம் திருகோணமலையின் மற்ற சமூகங்களால் புறக்கணிக்கப்படுவதாக பொய்யான குற்றச்சட்டுக்களை முன் வைத்து, திருகோணமலை மக்களுக்கு இடையே சாதியப்பாகுபட்டை விதைப்பதும், நாடாளுமன்ற உறுப்பினரிடம் சம்பளம் பெற்று வாழும் ஒருவர் திருக்கடலூர் வேட்பாளருக்கு இலட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும், மற்றும் இந்த தேர்தலில் துண்டுப்பிரசுரம் சுவரொட்டிகளுக்கு அதிக பணம் இறைத்தார் என்ற முறைப்பாடும், எதிர்காலத்தில் இவரது அரசியல் வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக என்னால் கருதமுடிகின்றது என்ற கருத்தை அவரிம் முன்வைத்து, துடிப்புள்ள இளைஞரான அவர் பேராசை இல்லாத பணிவுடனும், மாநகரசபை உறுப்பினராக இருந்து திருகோணமலை மக்களுக்கு செய்யும் சேவை, அவருக்கு எதிர்காலத்தில் மாநகர பிதா பதவியை பெற்றுத்தரும் என்பதே, எனது உறுதியான கருத்தாகும் என்பதையும் அவருக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு இந்த விடயத்தில் எனது இறுதிப் பரிந்துரையாக, தமிழரசு கட்சியின் அரசியல் நம்பிக்கையும், தமிழ் மக்கள் நம்பிக்கையும் பாதிக்கப்படாதவாறு, தமிழ் தேசிய வரலாற்றுப் பெருமை பெற்ற தமிழரசு கட்சியை திருகோணமலையில் அழிவின்றிக் காக்க, இவர்கள் இருவரையும் விட மட்டும் அல்லாது, தமிழரசு கட்சியில் கேட்டு வெற்றி பெற்ற மற்றைய ஒன்பது வெற்றி வேட்பாளர்களில், அதிகூடிய வாக்குகளைப் பெற்ற, உவர்மலை வாட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, யுவராஜ் குமாரை ஜனநாயக பண்புகளுடன், தமிழர் இனத்தின் நலனே தனிநபர் பேராசையைவிட மேலானது என்பதை நினைவில் நிறுத்தி, மேயராக தெரிவு செய்து, தமிழ் தேசிய ஒற்றுமையே தமிழர் எதிர்காலத்தின் சிறப்பு என்பதை சிந்தையில் ஏற்றி, தமிழ் தேசிய சித்தாந்தப் புரிந்துணர்வுடன் கூட்டணி அமைத்து, நல்லாட்சி அமைக்க வழி செய்யுமாறு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனிடம் பரிந்துரை செய்கின்றேன்.
எனது இந்த பரிந்துரையை உள்வாங்கி, எதிர்காலத்தின் தேவை கருதி தமிழரசு கட்சியை திருகோணமலையில் காக்க, உறுதியான நடவடிக்கையை எடுக்குமாறு, தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் செயளாலர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரிடம், ஒரு தமிழ் தேசியவாதியாக, வரலாற்றுப் பொறுப்புணர்வுடனான நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
