ஆர்ப்பாட்டம் நடத்தாதீர் : சாணக்கியன் உள்ளிட்ட 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு(Photo)
திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிலாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி கல்லெலுகே தொன் பிரதீப் நிஷாந்தகுமாரவினால், நீதிமன்றத்திற்கு 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க 106/1 என்ற சட்டத்தின் பிரகாரம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.அன்பார் குறித்த ஆர்ப்பாட்டத்தினை நடத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தடை உத்தரவு
திருகோணமலை - இலுப்பை குளம் பொரலுகந்த ரஜமஹா விகாரை நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடை விதித்திருந்த போதிலும் குறித்த கட்டுமான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், குறித்த நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் ( 01.10.2023) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.
இதனை அடுத்து நிலாவெளி பொலிஸார் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் பிரச்சினைகள் உருவாக்கப்படலாம் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன், தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் தமிழ் மக்கள் முன்னணி கட்சியின் இளைஞர் அணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், மற்றும் ரமேஷ் நிக்கலஸ் ஆகியோருக்கும் இவ்வாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
