கிண்ணியாவில் மீனவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களிடையில் முறுகல்நிலை
திருகோணமலை - கிண்ணியா, நடுவூற்று கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் இன்று மீன்பிடி செயற்பாடுகளின் போது மீனவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியா நடுவூற்று கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு மீனவர் சங்கத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தடையினை குளத்தின் மீன்பிடி சங்கமானது விதித்திருந்தது.
நடுவூற்று குள மீனவர் சங்கத்தினால் 4 மாதங்களுக்கு முன்னர் குளத்தில் விடப்பட்ட மீன்களை பிடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த போதே மீனவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களிடையில் முரண்பாடுகள் தோன்றியது.
குளத்தில் சங்கத்தினால் வளர்க்கப்பட்ட மீன்களைச் சங்க உறுப்பினர்கள் அல்லாத மீனவர்கள் பிடிக்க முற்பட்டதனால் சங்கத்திற்கும் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
முரண்பாடுகளில் ஈடுபட்ட மீனவர்கள் நடுவூற்று குள மீனவர் சங்கத்தில் அங்கத்தவர்களாக இல்லாமையினாலேயே குறித்த குளத்தில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் திருகோணமலை மாவட்ட நீரியல் வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம்.எல்.எம். இம்தியாஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார் பிரச்சினையினை தீர்த்து வைத்துள்ளனர்.
சுமூகமான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நடுவூற்று மீனவர் சங்க உறுப்பினர்கள் மீன்பிடித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அக்குளத்தில் சுமார் 30 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.