தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது தவறில்லை - திருகோணமலை தேரர் விளக்கம்!
திருகோணமலை கடற்கரை புத்தர்சிலை விவகாரத்துக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் இன்று (19.11.2025) நடைபெற்ற விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் மக்கள் இந்த விடயத்தில் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதை மகிழ்ச்சியுடனும், நேர்மையுடனும் கூறுகின்றோம். இங்குள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நட்புறவுடனேயே பழகி வருகின்றனர்.
பொலிஸார் மீது குற்றச்சாட்டு
பொலிஸாரே மிகவும் மோசமாக நடந்துகொண்டனர். எனவே யாரும் இதனை இனரீதியான மோதல் என்று கூறி விடயத்தைத் திசை திருப்ப வேண்டாம்.

திருகோணமலை கடற்கரையில் 1952ஆம் ஆண்டு முதல் மாவட்டத்தின் முதலாவது தர்ம பாடசாலை இயங்கி வந்தது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் இங்கிருந்த பாடசாலைக் கட்டிடம் முற்றாக அழிவடைந்தது. அது பின்னர் புனரமைக்கப்படவில்லை.
நீண்டகாலமாகப் புனரமைக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில், இந்த மாதம் விகாரையின் நிர்வாகக் குழுவின் தீர்மானப்படி அழிவடைந்த கட்டிடத்தைக் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்ற சனிக்கிழமை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பொலிஸார் நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பாக இந்த இடத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்து வணக்கத்திற்குரிய புத்தர்சிலையை பலவந்தமாக அகற்றிச் சென்றனர். அவர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை விகாரைக்குத் திரும்பியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |