புதையலில் கிடைத்த மன்னர் காலத்து வாளை விற்க முயன்றவர்கள் கைது
மஹியங்கனை காட்டில் புதையலில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் தொல்லியல் பெறுமதிமிக்க வாள் ஒன்றை 40 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த இரண்டு பேரை சமனலவெவ பம்பகின்ன பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பாணந்துறை வலான மத்திய மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலகம்பாகு மன்னன் காலத்திற்குரிய வாள்
இந்த சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று வாரங்களுக்கு முன்னர் மஹியங்கனை காட்டில் புதையல் தோண்டி இந்த வாளை எடுத்துள்ளனர்.
வலகம்பாகு மன்னனின் காலத்திற்குரிய தொல்லியல் பெறுமதிமிக்க இந்த வாளை 60 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராகி வருவதாக மத்திய மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து வாளை கொள்வனவு செய்பவர்கள் போல் நடித்து பொலிஸார் இந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 60 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருந்த வாளை 40 லட்சம் ரூபாவுக்கு வழங்க சந்தேக நபர்கள் இணங்கியுள்ளனர்.
பேரம் பேசுவதற்காக பொலிஸார் பம்பகின்ன பிரதேசத்திற்கு சந்தேக நபர்களை அழைத்து சென்று அவர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.