தலைமன்னாரில் தனியார் பேருந்துடன் மோதிய புகையிரதம்! விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளன
தலைமன்னாரில் தனியார் பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகிய சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் தலை மன்னார் பகுதியில் புகையிரதத்துடன்மோதி விபத்திற்குள்ளாகி 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது குறித்த தனியார் பேருந்தில் 30 பேர் பயணித்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த மாணவர்கள்,பயணிகள் உட்பட 25 பேர் உடனடியாக நோயாளர் வண்டி மூலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,பலத்த காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.செந்தூர்பதிராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரதகடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





