உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத ரவி செனவிரத்ன! பரபரப்புக் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க போதுமான அவகாசம் இருந்தும், அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பரபரப்புக் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்த, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்த்தன குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யூடியூப் இணையத்தள சேனல் ஒன்றின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தாக்குதலைத் தடுக்க உரிய நடவடிக்கை
சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த காணொளியில் தொடர்ந்தும் தெரியவந்துள்ளதாவது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருந்த அப்போதைய பிரதிப் பொலிஸ் மாஅதிபரும், தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான செயலாளர் ரவி செனவிரத்ன, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னதாக வெளிநாடு சென்று மீண்டும் திரும்பி வந்து, கடமைக்குச் சமூகமளித்த திகதி குறித்து பொய்யான தகவல் ஒன்றை கூறிக் கொண்டிருப்பதாக பாலித சிரிவர்த்தன குற்றம் சாட்டுகின்றார்.

ரவி செனவிரத்ன வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்பி வந்த பின்னர் ஏப்ரல் 16 ஆம் திகதியே பணிக்குத் திரும்பியதாக கூறிக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் அவர் ஏப்ரல் 13 ஆம் திகதியே பணிக்குத் திரும்பினார் என்பதற்கான ஆதாரங்களை பாலித சிறிவர்தன குறித்த காணொளியில் தெளிவாக முன்வைத்துள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற நிலையில், அவர் ஏப்ரல் 13 ஆம் திகதியிலிருந்தே பணியில் இருந்திருந்த காரணத்தினால், தாக்குதலைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தது என்றும் பாலித சிரிவர்த்தன தர்க்கரீதியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்த்தனவின் கருத்துக் குறித்து, தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன எதுவித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு