வெளிநாட்டில் இருந்து வந்த இலங்கையர் கைது: சோதனையில் சிக்கிய பெறுமதியான பொருட்கள்!
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்
இன்று(23.02.2026) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கொழும்பு - 12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
பொலிஸார் சோதனையில் சிக்கிய பொருட்கள்
இவர் இன்றைய தினம் அதிகாலை 3.50 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் கொண்டு வந்த மூன்று பயணப் பொதிகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, அந்தப் பொதிகளுக்குள் மிகச்சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான "மென்செஸ்டர்" (Manchester) ரக 40,000 சிகரெட்டுகள் அடங்கிய 200 கார்ட்டூன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.