எச்சரிக்கையை மீறி தாளையடி கடலுக்குள் இறங்கும் சுற்றுலாவாசிகள்....!
வெளிநாடு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வருகின்றனர்.
ஆனாலும் இந்த கடற்கரையானது பாதுகாப்பு இன்றி காணப்படுவதால் கடல் பரப்புக்குள் இறங்க வேண்டாம் என வடமராட்சி, கிழக்கு பொது அமைப்புகள் அதிவித்த போதும் அதனை பொறுப்பெடுக்காமல் கடற்கரைக்கு வரும் சுற்றுலா வாசிகள் கடலுக்குள் இறங்கி நீராடுகின்றனர்.
இன்றைய தினமும் (4/1/2026) அதிகளவான சுற்றுலா வாசிகள் மது போதையில் கடலின் ஆழமான பகுதிக்குள் சென்று நீராடி புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.
உயிரிழப்பதற்கான வாய்ப்பு
இதனை அவதானித்த ஊர் மக்கள் கடலின் தன்மை தொடர்பாக அவர்களுக்கு கூறிய போதும் அதனை செவிமடுக்காமல் நீராடியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அறிவித்த போது அவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கடலுக்குள் இறங்க வேண்டாம் என சுற்றுலா வாசிகளிடம் கூறி சென்றுள்ளார்.
வடமராட்சி கிழக்கு கடற்கரைக்கு வரும் சுற்றுலா வாசிகளே உங்கள் கவனத்திற்கு மாரி காலம் என்று அழைக்கப்படும் கார்த்திகை,மார்கழி மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் இந்த காலப்பகுதியில் கடலுக்குள் நீராடுபவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அறிவுறுத்தல்
பொலிஸார் மற்றும் கடற்தொழில் அமைச்சருடன் கலந்தாலோசித்து விட்டு கார்த்திகை மார்கழி தை மாதங்களில் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்படும் தாளையடி கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இரண்டு பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் பாதுகாப்பு கருதி புகைப்படங்கள் எடுக்கும் போது ஆழமான பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


