மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்ட மக்கள்
கோவிட் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் பயணத்தடையானது இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் கோவிட் செயலணி விடுத்துள்ள பயண அறிவுறுத்தல்களை மீறுவோரை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று அதிகாலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் கோவிட் செயலணி மூலம் இன்றைய தினம் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து முறைகள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறுவோரை கண்டறியும் வகையிலான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.
இதன்போது தேவையற்ற முறையில் வெளிவந்தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்ததுடன் சிலர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் பொருட்களை முண்டியடித்துக் கொள்வனவு செய்ததையும் காணமுடிந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 48 இற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளையில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 12 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் பொதுமக்களின் செயற்பாடானது கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலானது என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இன்றைய தினம் பொதுமக்களின் நடமாட்டத்தினையும் போக்குவரத்தினையும் குறைத்து கொள்ளுமாறு பொலிஸாரினால் ஒலிபெருக்கிககள் மூலம் அறிவுறுத்தல்களும் மட்டக்களப்பில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















