தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டால் வவுனியா வடக்கு தேசிய மக்கள் சக்தியிடம் பறி போகும் அபாயம்
தமிழரசுக் கட்சியின்(ITAK) செயற்பாட்டால் வவுனியா வடக்கு பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள்சக்தி 6 உறுப்பினர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 2 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி 2 உறுப்பினர்கள், சர்வஜன அதிகாரம் 1 உறுப்பினர் என 23 உறுப்பினர்கள் உள்ளனர்.
குழப்ப நிலை
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து ஆட்சி அமைப்பதாக முன்னராக கட்சிகள் மட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் வவுனியா மாநகர சபை ஆட்சி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வசம் சென்றது. தற்போது வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சி 5 உறுப்பினர்களுக்குள்ளும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியா வடக்கில் தி.கிருஸ்ணவேனி என்பவரை தவிசாளராக நிறுத்துவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
குறித்த தவிசாளரை ஏற்க முடியாது என தமிழரசுக் கட்சியின் வட்டாரம் வென்ற 3 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழரசுக் கட்சி
கட்சி தவிசாளரை மாற்றாது தி.கிருஸ்ணவேணி என்பரை முன்நிறுத்துமாக இருந்தால் தாம் வேறு ஒருவரை முன்னிறுத்த வேண்டி வரும் என அவர்கள் கட்சியிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களிடமும் பேசியுள்ளனர்.
அத்துடன், எதிரணியில் தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி என்பன இணைந்து 8 உறுப்பினர்களை கொண்டுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினரும் குடியேற்ற கிராமத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் என்பதுடன், சர்வஜன அதிகார உறுப்பினரும் பெரும்பான்மை இனத்தவராவார்.
தேசிய மக்கள் சக்தி
இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி தரப்பு 10 உறுப்பினர்களை இலகுவாக பெற்றுக் கொள்ளும் நிலை உள்ளது.
மறுபுறத்தில் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்பன 12 உறுப்பினர்களை கொண்டுள்ளதுடன் இதில் தமிழரசுக் கட்சியின் இருவர் ஒரு நிலைப்பாட்டிலும், மூவர் வேறு நிலைப்பாட்டிலும் உள்ளதால் தெரிவின் போது வாக்குகள் மாறுபட வாய்ப்புள்ளது.
இதனால் தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசியக் கட்சிகள் சமநிலை பெற்று திருவுலச்சீட்டுக்கு செல்லவோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றைய உறுப்பினரின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கவோ வாய்ப்புள்ளது.
எனவே, தமிழரசுக் கட்சி இது தொடர்பில் கவனம் செலுத்தி தவிசாளரது பெயரை முன்மொழிந்தால் மட்டுமே தமிழ் தேசியக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் உறுதியான நிலை ஏற்படும் என மற்றைய தமிழ் தேசியக் கட்சிகளின் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
