மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பணிப்புரை
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானங்களில் இதனை கடைப்பிடிக்குமாறும் உத்தியோகத்தர்கள்,பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முக்கிய வழிகாட்டல்கள்
தற்போதைய சூழ்நிலையில் வளங்கள் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, சபையின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள முக்கிய வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அலுவலக மற்றும் நூலகப் பயன்பாட்டில் தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைத்து வைக்க வேண்டும்.
எரிபொருள் பயன்பாடு
இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்தக்கூடிய இடங்களில் மின் பாவனையைக் குறைக்க உத்தியோகத்தர்கள் பழக வேண்டும் என்பதுடன் விளையாட்டு மைதானங்களில் பொது விளையாட்டு மைதானங்களில் இரவு நேர மின்விளக்குகளை (Floodlights) அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த வேண்டும். நிகழ்வுகள் முடிந்தவுடன் உடனடியாக அவற்றை அணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் எரிபொருள் பயன்பாட்டின் போது பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் பிரதேச சபையின் இந்தச் சிக்கன நடவடிக்கைகளுக்குத் துறைசார் உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி பொதுமக்களும், விளையாட்டுப் கழகங்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.