அம்பாறையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது
அம்பாறையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட கனரக சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமையும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் பணிப்புரைக்கு அமைவாக, அம்பாறை தலைமையகப் பொலிஸாரினால் அம்பாறை நகரில் விசேட போக்குவரத்துச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகள்
இதன்போது சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளமை உறுதியானது.

அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்த குறித்த கனரக சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவருக்கு எதிராக 4 தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையும், மேலும் ஒரு தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.