திமோர் - லெஸ்ட்டே விருது பெற்ற இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகே (Photos)
இலங்கை ஊடகவியலாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ப்ரெடி கமகேவுக்கு நவம்பர் மாதம் 27ஆம் திகதி கிழக்குத் திமோர் நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹோர்டாவினால் திமோர் லெஸ்டே எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்குத் திமோரின் சுதந்திரத்திற்கான பிரச்சாரத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் முகமாக இந்த கௌரவம் அமைந்துள்ளது.
வேறொரு நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் கிழக்கு திமோரின் தலைநகரில் பாராட்டப்படுவது இதுவே முதல் தடவையாகும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்ப வாழ்க்கை
இது சமூக நீதிக்காக இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ப்ரெடி கமகேவுக்கு மட்டுமின்றி, இதுபோன்ற பலருக்கும் கிடைத்த சிறப்பு மரியாதையாக கருதப்படுகிறது.
கமகே 1988 - 89இல் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸில் அரசியல் தஞ்சம் கோரியபோது திமோர் - லெஸ்டேவின் சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
1979 - 81 காலப்பகுதியில், நீர்கொழும்பு புனித மரியாள் உயர்தரப் பாடசாலையில் உயர்தர பாடசாலை மாணவனாக இருந்த போது, வணக்கத்திற்குரிய சரத் இத்தமல்கொடவுடன் கைகோர்த்து நீர்கொழும்பு சனசமூக நிலையத்தை நிறுவி அதனை முன்னெடுத்துச் சென்றார்.
தனது பள்ளி வாழ்க்கையில் கூட, தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்காக தனது நேரத்தையும் முயற்சியையும் செலவிட்டார். வாக்காளர் உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்ட ப்ரெடி, வெளிவாரியாக இளங்கலைப் பட்டதாரியானார்.
அத்துடன், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச
உறவுகளுக்கான உயர் டிப்ளோமாவும் பெற்றார்.
கிழக்குத் திமோரின் சுதந்திரப் போராட்டம்
கொள்கைப் பிரச்சினைகளின் அடிப்படையில் ஜனவபோத கேந்திரா என்ற நிறுவனத்தில் முழுநேர சேவையில் இருந்து விலகிய போதும் மக்கள் போராட்டத்தை ப்ரெடி கைவிடவில்லை.
அதன் பின்னர், "மூன்றாம் உலக நண்பர்கள்" என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக, அவர் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
88 - 89 பயங்கரவாதச் சூழல் காரணமாக தனது உயிரைக் காப்பாற்ற அரசியல் அகதியாக பிலிப்பைன்ஸில் வாழ வேண்டியிருந்தது.
அந்த காலகட்டத்தில்தான் கிழக்குத் திமோரின் சுதந்திரப் போராட்டத்தில் அதிக பங்களிப்பை வழங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்
பின்னர் இலங்கை வந்த அவர் நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்தார். இதன் காரணமாக, ஒருமுறை பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா விமான நிலையத்தில் அவர் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அதிகாரிகளால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில், விமான நிலையத்தில் போராட்டம் நடத்த ப்ரெடி அஞ்சவில்லை. இது குறித்து தேசிய நாளிதழ்களில் பல புகைப்பட அறிக்கைகள் வெளியாகியிருந்தன.
நீர்கொழும்பின் குண்டர் அரசியலுக்கு அவர் பலியாகி வைத்தியசாலைக்கு கூட செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவர் தனது போராட்டத்தை கைவிடவில்லை.
அத்துடன், தொழில்முறை வலை ஊடகவியலாளர்கள் சங்கத்தை நிறுவியவர் மற்றும் இணைய ஊடகத்திற்கான நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



